ரணிலின் வெற்றி காலத்தின் தேவை – சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நிவர்த்தி செய்ய அடுத்த ஐந்து வருடங்கள் காத்திருக்க நேரிடும் – அமைச்சர் டக்ளஸ்!
Friday, September 13th, 2024
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் முன்கொண்டு செல்ல முடியும். இல்லையேல் நாடு மீண்டும் அதலபாதாளத்தில் வீழும் நிலை உருவாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
பருத்தித்துறை கொற்றவற்றை கலைவாணி சனசமூக நிலைய சிவபாதம் கலையரங்கில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
வாக்களிப்பு என்பது ஒரு ஜனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களினதும் அதிசிறந்த உரிமையாகும்.
அந்த வகையில் “கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் தவறவிடும் பட்சத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் அதனை நிவர்த்தி செய்வதற்காகக் காத்திருக்க வேண்டும்.
அதனால்தான் கூறுகின்றேன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று.
உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி அடுத்த அரசியல் பருவகாலத்திலும் தொடர வேண்டும்.
அப்போதுதான் கடந்த இரு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல முடியும். இல்லையேல் அதலபாதாளத்தில் நாடு மீண்டும் வீழும்.
இதனை உணர்ந்து ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்வது நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.
இதேநேரம் எம்மை நம்பி உங்கள் வாக்குகளை அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம்.
சக தமிழ் அரசியல் தலைமைகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் இரகசிய உறவை வைத்துக்கொண்டு தமது சுயலாபங்களைப் பெற்ற பின்னர் அரசு ஏமாற்றிவிட்டது என்று மக்களை ஏமாற்றுவார்கள்.
ஆனால் நாம் அவ்வாறு ஒருபோதும் சொல்வதும் இல்லை சொல்ல விரும்புவதும் இல்லை. நாம் சொல்வதைத்தான் செய்வோம். ஜனாதிபதி ரணிலின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்.”என்று அவர் வலியுறுத்தியதுடன் அவரது வெற்றியே காலத்தின் தேவை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


