மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் அவர்களது நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது – டக்ளஸ் எம்.பி. உறுதி!

Wednesday, January 17th, 2018

மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்தால் அவர்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஒருபோதும் வீணடிக்கப்படமாட்டது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி மீசாலை பகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் மக்கள் யாரை நம்பி வாக்களித்தார்களோ அவர்களது ஏமாற்றுவித்தைகள் இன்று வெள்ளிடை மலையாக தெரிகின்றது. அதுமட்டுமன்றி அந்தப் பொய் வேஷதாரிகளது முகத்திரை கிழிந்துள்ள நிலையில் அவர்கள் மக்கள் முன்வர அச்சப்படுகின்றார்கள்.

அந்தவகையில் முதுகிலே புண் இருப்பவனே காட்டுக்குள் நுழைய பயப்படுவான். ஆனால் நாம் ஒருபோதும் அவ்வாறு பயப்படப்போவதில்லை. ஏனென்றால் எமது முதுகில் புண் இல்லை என்பதை நான் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றியை நோக்காகக் கொண்டு பல அரசியல் கட்சிகள் இன்று களமிறங்கியுள்ளன. இந்தக் கட்சிகளில் மக்களுக்காக மக்களுடன் நின்று உழைக்கும் கட்சி எது என்பதை மக்கள் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும்.

தேர்தல் வெற்றி என்பது எமது நோக்கமல்ல. இந்தத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் வென்று இந்தப் பகுதிகளை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அந்த அடிப்படையில்தான் அந்தந்தப் பகுதிகளைச்சேர்ந்த உறுப்பினர்களை நாம் தேர்தல் களங்களில் நிறுத்தியுள்ளோம். இங்கு குறிப்பாக பல்வேறுபட்ட தேவைப்பாடுகளுக்கு தீர்வுகாணப்படவேண்டியுள்ளது.

குறிப்பாக வீதி, சுகாதாரம், சுயதொழில்வாய்ப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தேவைகளை நிவர்த்திசெய்யும் வகையில் எமது எதிர்காலத்திட்டங்கள் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக இங்கு கிடைக்கப்பெறுகின்ற உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி இங்கு வாழும் மக்களது குறிப்பாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களினதும் விஷேட தேவைகளை உடையோராக வாழும் குடும்பங்களினதும் வாழ்வாதார பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை நிச்சயம் வழங்குவோம் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

Related posts:

இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ச...
பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதியும் கடற்றொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படும் - வ...