மக்களின் நலனுக்காக சக தரப்பினருடன் கைகோர்க்க தயாராகவே உள்ளோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Thursday, May 27th, 2021
எமது மக்கள் துன்பங்களை எதிர்கொள்ளுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை அகற்றுவதற்கான செயற்பாடுகளில் முன்நின்று கடமையாற்றுவதற்கு நாம் பின்நின்றது கிடையாது” என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்காக ஏனைய சக தரப்புக்களோடு கைகோர்த்து செயற்படத் தயங்கியதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலைக்கான பி.சி.ஆர். இயந்திரம் இதுவரை கிடைக்காத நிலையில், வடக்கு மாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இணைந்து அதற்கான நிதிப் பங்களிப்பினை வழங்க முன்வருவார்களா?, என்று ஊகம் ஒன்றினால் கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்தமை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் குறித்த ஊடகத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் வழங்கியிருந்த பதிலில்,
“வவுனியா வைத்தியசாலைக்கான பி.சி.ஆர். இயந்திரம் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த இயந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக அமைச்சரவை கூட்டங்களின் போது என்னால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் சாதகமான கருத்துக்களையே தெரிவிக்கின்ற நிலையில், சில நடைமுறை காரணங்களினால் காலதாமதம் ஏற்படுவதாகவே கருதுகின்றேன்.
எவ்வாறெனினும்,உங்களுடைய எதிர்பார்ப்புக்கு அமைய ஏனையவர்கள் முன்வருவார்களாயின், என்னுடைய பங்களிப்பினையும் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.
இவ்வாறான உயரிய பணிகளில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி, கடந்த காலங்களில் எமது மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் தங்களுடைய பங்களிப்பினை நல்குவது சிறப்பானதாக இருக்கும் என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


