மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, July 4th, 2018

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரானரும் திருமதி. விஜயகலாவின் கணவருமான தி. மகேஸ்வரன் அவர்களது படுகொலையானது ஏற்கனவே கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட கொலையாளிக்கு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி கொலையுடன் எம்மைத் தொடர்புபடுத்தி மீண்டும் ஒரு புரளி கிளப்பப்பட்டுள்ளது.

மேற்படி கொலைக்கும் எமக்கும் எவ்விதமான தொரடர்புகளும் இல்லை என்பதை நீதிமன்ற விசாரணைகள் நிரூபித்துள்ளன. இந்த நிலையில் மீண்டும், மீண்டும் பொய்யான தகவல்களை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான  பிரேரணைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த அரச காலத்தில் மகேஸ்வரனின் கொலை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் ஏன் அவர்கள் மேல்நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லையெனக் கேட்க விரும்புகின்றேன்.

அல்லது இவர் பங்கெடுக்கும் ஆட்சியில் கௌரவ ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடி ஒரு ஆணைக்குழுவை ஏன் அமைக்க முடியாது? அவ்வாறு ஒரு ஆணைக்குழுவை அமைத்து காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களது சகோதரர்களை அழைத்து விசாரித்தால் உண்மைகள் அம்பலத்திற்கு வரும் என்பதையும் இச்சபையில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இருப்பினும் அத்தகைய சட்ட நடவடிக்கைகளுக்குச் சென்றால் உண்மை அம்பலமாகிடும் எனக் கருதியே இவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லாமல் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றார்.  மேற்படி கொலையினை யார் செய்தார்கள் என்பது இந்த நாட்டுக்கே வெட்டவெளிச்சமாகும்.

இந்த நிலையில் மேற்படி கொலையினை செய்தவர்கள் ஒரு புறமிருக்க, அதனது பழியினை எம்மீது போடுவதை குறிப்பட்ட தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கொலையை செய்தவர்கள் கையும், மெய்யுமாகப் பிடிப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகின்றார். அவர்கள்தான் இக் கெலையை செய்தனர் என ஏற்றுக் கொண்டால் தங்களது அரசியலுக்கும், வர்த்கத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமென அஞ்சியே இவர்கள் அதனை மூடி மறைத்துவிடலாம் என எண்ணுகின்றார்.

உண்மையை ஒருபோதும் மூடி மறைத்துவிட முடியாது. மறைந்த மகேஸ்வரன் அவர்களது சகோதரர்களைக் கேட்டால் உண்மை என்வென்பது அம்பலத்திற்கு வரும். இதையே இந்தச் சபையில் நான் மீண்டும், மீண்டும் கூறிவைக்க விரும்புவதுடன் இவ்விடயம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராகி வருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


கிடைத்த சந்தர்ப்பங்கள்அனைத்தையும் மக்களது விடியலுக்கானதாக உருவாக்கி வெற்றிகண்டிருக்கின்றோம் - முல்லை...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...
வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் சுதந்திர தினத்துக்கு முன் கையளிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் த...