பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

Thursday, September 19th, 2019

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் அல்லாத ஏனைய பணிகளுக்கென வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 27/2 நிலையியல் கட்டளையின் கீழான கேள்வி நேர விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும், முறைகேடுகளும் காணப்படுவதாகவும், இத்தகைய நிலைமைகள் அரசியல் தலையீடுகளாக கணிக்கப் பெறுவதாகவும் பணியாளர்களது சங்கமானது குற்றச்சாட்டினை முன்வைத்து, போராட்டமொன்றையும் நடத்தி வருகின்றது.

குறிப்பாக, மேற்படி பணிகளுக்கென வடக்கு மாகாணத்திலிருந்து விண்ணப்பித்திருந்த 400க்கும் அதிகமான விண்ணப்பதாரிகளின் பெயர்கள், உயர் கல்வி அமைச்சிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஆட்சேர்ப்புப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்திற்கு வெளியே வாழ்ந்து வருகின்றவர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டு, மேற்படி ஆட்சேர்ப்புப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு நியமனங்களை வழங்குவதைத் துரிதப்படுத்துமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அழுத்தங்கள் உயர் கல்வி அமைச்சிலிருந்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் மேற்படி பணியாளர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வடக்கு மாகாணத்திலே வேலைவாய்பற்று பல ஆயிரக் கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கே நிலவுகின்ற அனைத்து அரச நிறுவனங்களின்  வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்கின்றபோது, வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் வெற்றிடங்களுக்கு வெளி மாகாணத்தவர்களை நியமிக்க முனைவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

Related posts: