நீர்வேளாண்மை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு. – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Tuesday, November 8th, 2022

இலங்கையின் பொருளாதாரத்திற்கு இறால் வளர்ப்பு கணிசமான பங்களிப்பு செய்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொறோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இறால் வளர்ப்பின் மூலம் கடந்த வருடம் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(08.11.2022) நடைபெற்ற ‘உயிரியல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றின் ஊடாக நிலைபேறான நீர்வேளாண்மை’ எனனும் தொணிப் பொருளிலான செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயம் தொடர்பான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த கருத்தரங்கில்,

இலங்கையில் நீர்வேளாண்மை உற்பத்திகளை வலுப்படுத்தவதற்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற கொரிய குடியரசு, உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நீர்வேளாண்மை எனப்படுகின்ற பண்ணை முறையிலான கடலுணவு உற்பத்தி, பருவகால மற்றும் நன்னீர் மீன் போன்றன வளர்ப்பு முறைகள் உணவுப் பாதுகாப்பினை அதிகரித்துக் கொள்வதற்கான சிறந்த வழிவகையாக காணப்படுகின்றது.

குறிப்பாக கடலுணவு உற்பத்திகளை அதிகளவில் உண்பதன் மூலம் தேவையானளவு புரதத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.

நீர்வேளாண்மை என்பது பல்வேறு உற்பத்தி முறைகளையும் வெவ்வேறான நீரியல் சூழல்களையும் கொண்ட உற்பத்தியாக இருக்கின்ற போதும், நீர்வேளாண்மையை நிலைபேறானதாக மேம்படுத்திக் கொள்வதில் பல்வேறு நாடுகளும் ஆர்வம் செலுத்தி வருகின்றன.

அந்தவகையில், இலங்கையில் நீர்வேளாண்மை உற்பத்திகளை நிலைபேறானதாகப் பேணுவதற்கு கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, பண்ணை முறையிலான இறால் உற்பத்தி இலங்கையின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பினை செய்யும் வகையில் வளர்ச்சியடைந்து வருகின்றது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டு சுமார் 14,414 மெற்றிக்தொன் இறால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

இருப்பினும், நோய் பரவல் போன்ற பல்வேறு சவால்களுக்கு இறால் உற்பத்தி தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றது.

தொழில்நுட்ப ரீதியான தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆய்வுச் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இவ்வாறான சவால்களை கட்டுப்படுத்த முடியும்.

நாரா நிறுவனத்தின் மேற்பார்வையில் தொற்று நோய் பிரிவு ஒன்றினை உருவாக்குவதன் மூலம் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts:

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்த...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...
குறுகிய அரசில் சுயலாபமே குடிநீர் பிரச்சினை தீரா பிரச்சினையாக தொடர்வதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் ச...