நீதிமன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கை வேண்டும்!

Friday, November 17th, 2017

நீதிமன்றங்களுக்கும் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்கலாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,

உச்ச நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகளை நியமிப்பதற்கும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற நீதிமன்றங்களில் மேலதிகமாக நீதிபதிகளை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் தமிழ் மொழியோடு, தமிழ் பண்பாட்டு, கலாசார விழுமியங்களுடன் பரிச்சயமானவர்களாக இருத்தலும் அவசியமாகும். தமிழ் மொழி மூலமான மொழிப் பயன்பாட்டையும் கலாசாரப்  பண்பாட்டையும் கொண்டவர்களது பல வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு தீர்வமாக இந்த நடைமுறை அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

அத்துடன், அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். இந்ட விடயத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும்.

கடந்தகால யுத்தப் பாதிப்புகள் மற்றும் தொடரும் இயற்கை அனர்த்தப் பாதிப்புகள் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அவதானத்தில் கொண்டும், பின்தங்கியப் பகுதிகளை அவதானத்தில் கொண்டும், அப்பகுதிகளுக்கு அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு நிதி ஆணைக்குழுவானது நிதி ஒதுக்கீடுகளுக்கான ஏற்பாடுகளின் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

Related posts:


வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உற...
மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டு கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் பயணிக்கும் - ...