நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் – கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, May 3rd, 2021

கொரோனா தொற்று இலங்கையில் மாத்திரமல்ல உலகக்கிலும் தற்போது பாரிய அச்சசுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன் சில நாடுகளில் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவையும் குறிப்பிடலாம் என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை  குறித்த தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் சில கவனக்குறைவு காரணமாக மீண்டும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஆனாலும் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவிற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

வெளிநாடுகளில் இருந்து பரவுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களை கட்டுப்படுத்தி இருப்பதால் அது குறைக்கப்பட்டுள்ளது. இத்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முழுமையாக முடக்குவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது நாடு மட்டுமல்லாது அனைத்து நாடுகளுமே தங்களது நாட்டினை முடக்கும் நிலைக்கு உட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாத்திரமே அந்த அரசாங்கங்கள் முடக்கி வருகின்றன. அவ்வாறு நாட்டினை முடக்கும் சந்தர்ப்பத்தில் நாடு பட்டினியில் மரணிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் எமது அரசாங்கம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை சுகாதார முறைகளில் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக வீதியிலே இருக்கின்ற இராணுவ சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களை மறித்து அணிந்து செல்லுமாறு அறுவுறுத்தி வருகின்றனர். மேலும் இராணுவச்சோதனை சாவடிகள் இவ்வாறான தேவைப்பாடுகளுக்கு வசதியாக இருப்பதுடன் நாங்கள் அதனை வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதனை கெடுபிடி என்று நோக்கக்கூடாது.

பொதுமக்களை முகக்கவசம் அணிந்து செல்லுமாறு பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்து வருகின்றனர். அதனை சொல்லுவதற்கும் ஒருவர் தேவைதானே அதனைத்தான் அவர்கள் செய்து வருகின்றனர். ஆகவே சோதனைச் சாவடி இருப்பதால் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைவரும் கவனமாக இருப்பார்கள். அத்தோடு சோதனைச் சாவடிகளை நிரந்தரமாக்க வேண்டிய தேவை இல்லை என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மாகாணசபை தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளரினால் கேட்கப்பட்டபோது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கொண்டு வரப்பட்ட அரசாங்கத்திற்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்குரிய வாய்ப்பு கிடைத்த போதும் அவர்கள் தேர்தலை ஒத்தி வைத்தார்கள். ஆனால் எங்களுடைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை தேர்தலை எந்தளவு விரைவாக நடாத்தலாமோ அந்தளவு விரைவாக நடத்துவதுதான் நோக்கமும் கொள்கையுமாக இருக்கின்றது.

அந்த வகையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், கொரோனாவை ஒரு காரணமாக வைத்துக்கொள்ளலாம். கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்ற தேர்தலின் போதும் கொரோனா பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை.

இன்று இத்தொற்று நோய் அதிக பிரச்சனையாக உள்ளமையால்; அதனை கருத்தில் எடுக்க வேண்டும். அதனை விட புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா தேர்தலை நடத்துவதா என்ற முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்கள் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

புதிய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தாலும் அல்லது பழைய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஏனென்றால் இது தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும். பழைய முறையில் தேர்தல் நடத்துவதாக இருந்தால் அதற்கு காலம் போகாது.

ஆனால் புதிய முறையில் தேர்தல் நடத்துவதாக இருந்தால் எல்லை நிர்ணய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு நிறைய காலம் எடுக்கும்,. சிலவேளைகளில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது மாத்திரமல்லாது சர்வஜன வாக்கெடுப்பிற்கும் போக வேண்டிவரும். அதன் அடிப்படையில் இந்த தேர்தலை விரைவாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் தமக்குள்ளேயும், எதிர் தரப்பினருடனும் கலந்துரையாடி வருகின்றது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: