நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க உடனடி நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Friday, November 2nd, 2018யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாகப் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சின் கீழ் இருக்கும் புனரமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இதன்பிரகாரம் எதிர்வரும் 9ஆம் திகதி முதற்கட்டமாக முல்லைத்தீவில் 320 பேருக்கும், கிளிநொச்சியில் 300 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 170 பேருக்கும் முதல் தொகுதி கொடுப்பனவுகளுக்கான காசோலைகளை வழங்கிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருதொகுதியினரான 790 பேருக்கு காசோலைகளை வழங்கிவைக்கும் இந்தநிகழ்வுகள் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்திலும், மதியம் கிளிநொச்சியில் கூட்டுறவு மண்டபத்திலும், யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலகத்தில் மாலையிலும் நடைபெறவுள்ளது.
இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்வைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் கோரிக்கைகள் மற்றும் தேவைகளுடன் சந்திக்கவுள்ள மக்களையும் சந்தித்து அவர்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இந்த இழப்பீட்டுத் தொகையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை. என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட திட்டங்களை ஏற்படுத்தி மேலும் இழப்பீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்கவும், எஞ்சியவர்களுக்கும், உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|