தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Wednesday, February 26th, 2020

மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சரியாரனவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

மாறாக, மக்களின் பிரச்சினைகளை தீராத பிரச்சினைகளாக வைத்திருந்து அதனூடு அரசியல் செய்கின்ற தரப்பினரின் உணர்ச்சியை ஏற்படுத்தும் கருத்துக்களை நம்பி தொடர்ந்தும் அவ்வாறானவர்களையே மக்கள் தெரிவு செய்வார்களாயின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், ஊறணிப் பிரதேசத்தில் கரைவலை செயற்பாட்டை மேற்கொள்வதற்கான நிரந்தர அனுமதியை வழங்குவது தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதாகவும் அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்திற்கு இன்று (26.02.2020) வருகை தந்திருந்த பொத்துவில் ஊறணி கிராமிய மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊறணிப் பிரதேசத்தில் கரைவலையைப் பயன்படுத்துவதற்கு 2014 ஆண்டு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியைப் பயன்படுத்தி சுமார் 70 குடும்பங்ளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊறணியை அண்டிய பிரதேசங்களில் கரை வலை செயற்பாட்டிற்கு நிரந்தர அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு இதுவரை குறித்த அனுமதி நிரந்தரமாக்கப்படாமையினால் நிச்சயமற்ற ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாகவும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

மேலும், குறித்த பிரதேசத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் தங்களுக்கு மீன்பிடிப் படகு மற்றும் வலை போன்றவற்றை கொள்வனவு இலகு வழிமுறைகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமை;சசர் டக்ளஸ் தேவானந்தா. விரைவில் குறித்த பிரதேசத்திற்கு நேரடியாக வருகை தந்து பிரச்சினைகளை ஆராய்ந்து நியாயமானவற்றிற்கு தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

எவ்வாறெனினும், அனைத்து விடயங்களையும் உடனடியாக நிறைவேற்றுவது சாத்தியமில்லை எனவும் தேர்தல் நிறைவடைந்து புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts: