தமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் – முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Tuesday, October 25th, 2016
நாம் அரசியலில் இருப்பது தத்தளித்தக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுப்பதற்காகவே அன்றி இதர தமிழ் அரசியல் தலைமைகள் போன்று சொந்த சுயநலன்களுக்காக அல்ல. விடுதலைக்காக உயிர் நீத்த அனைத்து இயக்க போராளிகளினதும் யுத்தத்தால் இறந்துபோன பொதுமக்களினதும் தியாகங்கள் ஈடேறவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் அயராது உழைத்துவருகின்றோம் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த டக்களஸ் தேவானந்தா முள்ளிவாய்க்கால் பகுதி மக்களுடனான சந்திபின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது –
நீங்கள் எதிர்கொண்ட வேதனைகளையும் அதனால் எற்பட்ட வலிகளையும் நான் நன்கறிவேன். இந்த ஈழவிடுதலை போராட்டத்தில் நானும் எனது சகோதரனையும் சகோதரியையும் மட்டுமல்லாது உடனிருந்த பல தோழர்களையும் இழந்துள்ளேன். இதனால் உங்களது எதிர்பார்ப்புகளை ஈடேற்றி உங்கள் ஒவ்வொருவரதும் வாழ்வில் ஒரு புதிய வாழ்வியலுக்கான தளத்தை நோக்கி அழைத்து செல்லவேண்டும் என்பதே எனது நோக்கமாகும். ஆனால் கடந்த காலங்களைப்போன்று தற்போது எம்மிடம் உடனடித்தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான அதிகாரங்கள் காணப்படவில்லை.
எம்மிடம் அதிகாரங்கள் அதிகரிக்கும்போதுதான் மக்களுக்கான பணிகளையும் அதிகரித்துச்செல்ல முடியும். நான் தமிழ் மக்களது வேதனைகள் அனைத்தும் துடைத்தெறியப்படவேண்டும் என்பதற்காகவே மத்தியுடன் யதார்த்தமான இணக்க அரசியலூடாக பயணித்து அயராது உழைத்துவருகின்றேன்.
கடந்த காலங்களில் நான் அமைச்சராக இருந்த காரணத்தால் மக்களுக்கான பெரும் பணிகளை செயற்பாடுகளூடாக செய்து காட்டியிருந்தேன். ஆனால் தற்போது அவ்வாறான அதிகாரம் எம்மிடம் இல்லாமையால் இன்று உங்களது ஒவ்வொரு பிரச்சினைகளையும் நாடாளுமன்றில் குரலினூடாக எடுத்துக்கூறி இயன்றவரை நிறைவேற்றித்தர உழைத்து வருகின்றேன்.
தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகவே நாம் ஜனநாயக வழியிலான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளோம். இந்த ஜனநாயக வழியிலான அரசியல் நிலைப்பாடே உலக அரசியல் நீரோட்டத்திற்கேற்ப எமது இனத்தின் நலன்சார்ந்ததாக இருப்பதை நன்கு உணர்ந்துகொண்டதால்தான் நாம் 87 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தகாலங்களிலிருந்து அதை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்திவந்ததுடன் அதை உறுதியுடன் முன்னெடுத்து அந்த மதினுட்பமிக்க பாதையூடாக அதிக வெற்றிகளையும் பெற்று மக்களுடம் கொடுத்துள்ளோம்.
இன்று நீங்கள் சந்தித்துவரும் ஒவ்வொரு துன்பங்களுக்கும் நீங்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்தால் மட்டுமே வெற்றிகாணமுடியும். அதற்கான களத்தை உருவாக்கிக்கொள்ள நீங்கள் உறுதியுடன் கைகோர்த்து எமக்கு ஆதரவுப் பலத்தைதந்தால் நிச்சயம் நான் உங்களது வாழ்வியலை மட்டுமல்ல அரசியல் உரிமைகளையும் வென்றெடுத்து காட்டுவேன் என்றார்.
Related posts:
|
|