சமூகவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த மக்களின் விழிப்புணர்வு அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, September 7th, 2016யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக பொலிஸாரால் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருட்களை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு கடத்துவதற்கு குடாநாட்டை மையமாகக் கொண்டு செயற்படுவதாகவும் அறியமுடிகின்றது.
யுத்தத்திற்குப் பின்னர் யாழ். குடாநாட்டு மக்கள் பல சவால்களுக்கு முகம் கொடுத்தபடி மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்று மெதுவாக தலைதூக்கி வருகின்ற இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளால் எமது இளைய தலைமுறையினர் பெருமளவில் பாதிக்கப்படுகின்ற துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக தனது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது முகநூல் பதிவில் –
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பரிமாற்றம் என்பன குடாநாட்டின் அமைதியை சீர்குலைத்துள்ள அதேவேளை சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளதாக மக்கள் எம்மிடம் நேரடியாக தெரிவித்துவருகின்றனர்.
எனவே இவ்விடயத்தில் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்படுவது காலத்தின் அவசியமாகும். அதேவேளை பொதுமக்களும் விழிப்பாக இருக்கவேண்டும்.
இரு தரப்பும் இணைந்து செயற்படும்போதே இவ்வாறானா சமூகவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதுடன், எமது எதிர்காலச் சந்ததியினரையும் பாதுகாக்க முடியும்.
போதைப்பொருள் கடத்தல், பாவனை தொடர்பான சமூகவிரோத செயல்கள் தொடர்பாக இரகசியத் தகவல்கள் வழங்குவோரைப் பாதுகாக்கும் பொறுப்பை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் தகவல் வழங்குவோரை பொலிஸாரே குற்றவாளிகளுக்கு இனங்காட்டும் சம்பவங்கள் சில நடந்திருப்பதாகவும், இதன் காரணமாக சமூக அக்கறையுடன் செயற்படுவோர் சமூக விரோதிகளால் தாம் அச்சுறுத்தப்படுவதாகவும் மக்கள் எம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்விடயத்தில் பொது அமைப்புக்கள், புத்தி ஜீவிகள், சமய நிறுவனங்கள் உரியவகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என்பதை கருத்தில் கொண்டு இளைய சந்ததியினரக்கு சரியான வழியைக் காட்ட முன்வர வேண்டும்.
இதேவேளை வடக்கு மாகாணசபை எமது சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டாவது இதுவிடயத்திலாவது சமூக நலன் சார்ந்ததான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதனை அர்த்தபூர்வமாக செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த விரும்புகின்றேன்என பதிவிட்டுள்ளார்.
இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் சமூகவிரோத செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்த வேண்டுமென பொலிஸாரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
Related posts:
|
|