காணி உரிமங்களுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் கந்தர்மடம் வடகிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!
Tuesday, December 27th, 2016
கந்தர்மடம் வடகிழக்கு பகுதியில் வாழும் மக்கள் தமது குடியிருப்பு காணிகளுக்கான காணி உரிமங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றையதினம்(27) யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த குறித்த பகுதி மக்கள் தமது குடியிருப்பு காணிகளுக்கு உரிமங்கள் இன்மையால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்திருந்தனர்.

அத்துடன் 100 வருடங்களுக்கு மேலாக தாம் குறித்த பகுதியிலுள்ள வண்ணார்பண்ணை செட்டியார் சிவன்கோவில் ஆதீனத்திற்கு சொந்தமான காணியில் குடியிருப்பதாகவும் இன்றுவரை அதற்கான உரிமங்களை தாம் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமையால் அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் தமது பகுதிக்கான வீதிகள் மற்றும் நீர்வடிகால்கள் கூட புனரமைப்பு செய்யப்படாதிருப்பதாகவும் இது தொடர்பாக யாழ் மாநகர சபையிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துனர்.

மக்களது கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை துறைசார்ந்த அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மெற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இச்சந்திப்பின்போது கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன், கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக உறுப்பினர் திருமதி தயாழினி ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|
|


