கஜேந்திரன்குமார் குண்டர்களையும், வாள் வெட்டுக்குழுவையும்  நம்பி அரசியல் செய்கின்றார். ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

Tuesday, December 6th, 2016

போர்க்குற்றங்களுக்கு ஈ.பி.டிபியும், அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியிருக்கின்றார் ஒட்டுண்ணிக் குழவின் தலைவர் கஜேந்திரன்குமார்.

ஆனாலும் எந்தவகையில் போர்க்குற்றங்களோடு ஈ.பி.டி.பிக்கு தொடர்பு உள்ளது என்பதை ஆதாரங்களுடன் அவர் கூறியிருந்தால் அதையிட்டு நாம் ஆராய்ந்திருப்போம். ஆனால் அப்புக்காத்துத் தொழில் படித்த கஜேந்திரன்குமார்,அரசியல் காழ்ப்புணர்வோடு ஆதாரமற்ற ஒரு பொய்யைக் கூறியிருக்கின்றார்.மனித அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு, கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று நாம் போராடியபோது,தமிழ் மக்கள் அழிவதை விரும்பி யுத்தம் எனும் தீயிற்கு எரிபொருளை ஊற்றியவர்களில் இந்த ஒட்டுண்ணிக்குழுவின் தலைவர் கஜேந்திரனும் ஒருவராகவே இருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாறெங்கும் கஜேந்திரன்குமாரும் அவரது குடும்பமும், அவரது கட்சி உறுப்பினர்களும் தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணி அரசியலையே செய்திருக்கின்றார்கள்.

மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையை மறுக்கும் சட்டவாக்கத்திற்கு இவரது பாட்டன் பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்து துரோகம் செய்ததையும்,அவரது தகப்பன் குமார் பொன்னம்பலம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இரட்டை முகவராக செயற்பட்டு துரோகம் செய்ததை  தெரிந்து கொண்ட புலிகள் அவரை சுட்டுக் கொன்றதையும் இவர் மறந்துவிட்டார்.

இவரது கட்சியைச் சேர்ந்த குதிரைக் கஜேந்திரன் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் ஒழிந்து கொண்டு பொங்கு தமிழ் நடத்துவதாகக் கூறி தமிழ் மக்களை வீதிக்கு இழுத்ததையும்,பல்வேறு கொலைகளுக்கு காரணமானவர்களுடன் செயற்பட்டதையும்,40 ஆயிரம் சவப்பெட்டிகளை வடக்கிற்கு அனுப்புங்கள் என்று நாடாளுமன்றத்தில் கூறி தமிழ் மக்கள் மீது யுத்தத்தை திணித்ததையும் இந்த ஒட்டுண்ணிக் குழுத் தலைவர் கஜேந்திரன்குமார் வசதியாக மறந்துவிட்டார். 1997 ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கொலைகளை விசாரித்தால் கஜேந்திரன்குமாரின் நெருங்கிய சகாவான குதிரைக் கஜேந்திரனும் குற்றவாளியாக அடையாளம் காணப்படலாம் என்ற அச்சமும் கஜேந்திரன்குமாரை அச்சத்திற்குள் தள்ளிவிட்டிருக்கலாம்.

“ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இராது” என்பதுபோல் இவரும் கடுமையான தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கப்பார்த்தார். அதற்கு தமிழ் மக்கள் எடுபடவில்லை என்பதால் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இப்போது குண்டர் குழுக்களை உருவாக்கி ஏனைய தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களை அச்சுறுத்தவும்,  பொது நிகழ்வுகளில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி குழப்பவும் முயற்சித்துவருகின்றார்.

அவ்வாறு இவரின் எடுபிடிகளாகவும், குண்டர் குழுவாகவும் செயற்படும் ஒருவரையே அன்மையில், வாள்வெட்டுக் குழுவின் முக்கியமானவராகக் கூறப்படும் நபர் ஒருவரை கஜேந்திரன்குமாரின் அலுவலகத்தில் வைத்து பொலிஸார் கைது செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. அப்படிக் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவராக இருந்ததான வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரன் குண்டர் குழுவையும், வாள் வெட்டுக்குழுவையும் நடத்தி வருகின்றாரா? என்ற சந்தேகங்கள் தமிழ் மக்களிடையே எழுந்துள்ள நிலையிலேயே இப்போது ஈ.பி.டி.பியை ஒட்டுக்குழு என்று பழைய பல்லவியைப் பாடியிருக்கின்றார்.

ஈ.பி.டி.பியின் அரசியல் வழிமுறையே நிதர்சனமானது என்பதை காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது. இந்த சரியான பயணத்தில் நாம் பல அவப்பெயர்களையும். அரசியல் காழ்ப்புனர்வு கொண்ட பல குற்றச்சாட்டுக்களையும் சுமந்தே வந்திருக்கின்றோம். இன்று எம்மீது குற்றம் சுமத்தப்பட்ட பல கொலைகள் தொடர்பான உண்மைகள் அம்பலமாகி வருகின்றது. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை சட்டம் அடையாளம் காட்டி வருகின்றது. அந்தவகையில் எம்மை வரலாறு விடுதலை செய்து வருகின்றது.

எனவே தமிழ்த் தேசியம் பேசி சமூகத்திற்குள் தம்மையும், தமது பாவக் கரங்களையும் மறைத்துக்கொண்டவர்கள் பழைய புராணங்களைப்பாடியும்,அவதூறுகளைக் கூறியும் ஈ.பி.டி.பியை அதன் பயணத்திலிருந்து தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஊடகப் பிரிவு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

avaassss-680x365

Related posts:


வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு நாடாளுமன்றத்தில் ட...
தீர்மானங்களை நிறைவேற்றுவது முக்கியமல்ல: அவற்றை செயற்படுத்துவதே முக்கியமானது -  டக்ளஸ் தேவானந்தா!
செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் - பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும...