எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 22 இலட்சத்து 55 ஆயிரத்து 425 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 7th, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு, கொழும்பு, களுத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த நேரடி மற்றும் மறைமுக கடற்றொழிலாளர்கள் 12,229 பேருக்கு இதுவரையில் முதற்கட்டமாக 22 இலட்சத்து 55 ஆயிரத்து 425 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கழு நிலை விவாதத்தில் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சு அதொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால்; கடந்த தேர்தல் காலங்களில் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளுக்கு அமைவாகவும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாகவும் ஒலுவில் துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சின் கீழ் கொண்டு வருகின்ற ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக குளிரூட்டி மற்றும் அதி விறைவிப்பான் கிடங்கு வசதிகள் கொண்ட பகுதியை நாம் கையேற்றுள்ளோம்.

அத்துடன் கடற்றொழில் படகுகளை அங்கு தரித்து வைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அதேவேளை பாதிப்படைந்த வலை உள்ளடங்களான கடற்றொழில் உபகரணங்களுக்கு பதிலாக புதிய வலை மற்றும் உபகரணங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம், கப்பல் அனர்த்தத்திற்குள்ளான சுமார் 459 கிலோ மீற்றர் கடல் பகுதி கடற்றொழிலாளர்களது பாதுகாப்பு கருதி தடைசெய்யப்பட்ட வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த பகுதி தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பெறுபேறுகளின்படி இத்தடை குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்டிருந்த புறவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழில் படகுகள் மற்றும் உபகரணங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முகமாக நாம் சமர்ப்பித்திருந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதுடன், தற்போது அடுத்த கட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெகுவிரைவில் இந்த இழப்பீடுகளை வழங்க முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நோர்த் சீ நிறுவனத்தின் மூலமாக தரமான  மீன்பிடி வலைகள் உற்பத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்த முறைகேடுகள் காரணமாக இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் தரம் குன்றி இருந்ததாக கடற்றொழிலாளர்கள் மத்தியில் முறைப்பாடுகள் எழுந்திருந்தன.

நாங்கள் இந்த நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் அந்த நிலைமைகளை மாற்றி, வீரவில, லுனுவில மற்றும் குருநகர் ஆகிய மூன்று தொழிற்சாலைகளிலும் தரமான வலை உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். கொரோனா அனர்த்தம் காரணமாக மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் சில தடைகள், தாமதங்கள் ஏற்படுகின்ற போதிலும், அவற்றை சமாளித்து இந் நிறுவனத்தை செயற்படுத்தி வருகின்றோம என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: