ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!
Tuesday, July 28th, 2020ஈழமக்கள் ஜனநாயக் கட்சி அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுடைய இருப்பிற்கோ அல்லது கலாச்சார விழுமியங்களுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படாது என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அதற்கான உத்தரவாதத்தினை தன்னால் தரமுடியும் எனவும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் நோக்கில் இன்று திருமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நடை பெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், கிழக்கிற்கான தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயணியின் உருவாக்கம் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் ஏற்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், குறித்த செயலணி அமைக்கப்பட்டதையடுத்து, தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துக் கூறிய நிலையில், தமிழ் பேசும் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரை நியமிக்கும் பொறுப்பை ஜனாதிபதி தன்னிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, தற்போதைய ஜனாதிபதி தொடர்பிலும் அரசாங்கம் தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தினை சில சக்திகள் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாக தெரிவித்ததுடன், தென்னிலங்கை அரசியல்வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளப் போவதில்லை எனவும், மக்கள் அதிகாரங்களை தருவார்களாயின் அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது தன்னுடைய பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
அந்தவகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இருந்து ஒரு பிரதிநிதியையாவது திருமலை மக்கள் தன்னுடன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க லேண்டும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, சம்பூர்கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் தேவானந்தா, மாற்றுத் திட்டத்திற்கும் மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி மக்கள் முனனிலையில் வந்திருப்பதாகவும், எதிர்பார்க்கின்ற அதிகாரத்தை மக்கள் வழங்குார்களாயின் சில வருடங்களில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பிககை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|