அரச பணியாளர்களுக்கு இருமொழி தேர்ச்சி அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 26th, 2016

அரச பணிகளில் ஈடுபடுவோருக்கு இரு மொழித் தேர்ச்சி கட்டாயம் என கடந்த காலங்களில் சொல்லப்பட்டு வந்தது. அது இன்றைய நிலையில் எந்தளவுக்கு சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது என்பது பற்றிய ஒரு விளக்கத்தை அமைச்சர் வழங்க வேண்டும் என்றும் இந்த நாட்டைப் பொறுத்த வரையில் இந்த இரு மொழித் தேர்ச்சியானது அரச பணியாளர்களுக்கு அவசியம் தேவை என்பதால் அது தொடர்பில் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இலங்கையின் மொழிகள் தொடர்பான அடிப்டைச் சட்டம் அரசியலமைப்பின் IV அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள எற்பாடுகள் 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தாலும் (1987) 16வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தாலும் (1988) திருத்தப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் மொழி உரிமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அதன் பிரகாரம் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாதல் வேண்டும் என்றும் (அலசியலமைப்புக்கான 13வது சீர்திருத்தத்தால் திருத்தப்படவாறான 18(1) மற்றும் 18(2)இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் ஆதல் வேண்டும் என்றும் ( 19ஆம் உறுப்புரை) சிங்களமும் தமிழும் இலங்கை முழுவதிலும் நிருவாக மொழிகளாக இருத்தல் வேண்டும் என்றும், (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தத்தால் திருத்தப்பட்டவாறான – 22(1)ஆம் உறுப்புரை)

வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன் பொதுப் பதிவேடுகளை பேணி வருவதற்காகவும் பகிரங்க நிறுவனங்களினால் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் – (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தத்தால் திருத்தப்பட்டவாறான 22(1)ஆம் உறுப்புரை)

ஆயின் உதவி அரசாங்க அதிபரின் பிரிவொன்றை உள்ளடக்கும் கூறு எதனதும் சனத்தொகை சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மை சனத்தொகை என்ன விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற் கொண்டு சிங்களம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படும் மொழி தவிர்ந்த ஒரு மொழி அத்தகைய இடப்பரப்புக்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தலாம் என – ஜனாதிபதி பணிக்கலாம் என்றும் – (அரசியலமைப்பிற்கான 16வது திருத்தப்பட்டவாறான 22(1) ஆம் உறுப்புரை)

இதன் காரணமாக 29 பிரிவுகள் இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகளாக வர்த்தமானியில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் 72 பிரிவுகள் இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் வரத்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த 72 பிரிவுகளில் 41 பிரிவுகள் செயற்பட பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 31 பிரிவுகள் பிரகடனப்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த சபையின் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த இரு மொழி அமுலாக்கல் தொடர்பில் இதுவரை 23 சுற்றறிக்கைகள் வெளியடப்பட்டும் அதன் செயற்பாடுகள் இன்னும் எமது மக்களுக்கு பலன் தராத நிலையிலேயே இரக்கின்றது என்பதை நான் இங்கு அவதானத்தக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

எனவே இந்த ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்பாடுகளை முன்னெடுத்து மொழி காரணமாகப் பாதிக்கப்படுகின்ற எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் ஏற்கனவே வலியுறுத்தியிருந்ததையே மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறான மொழிக் கொள்கை அமுலாக்கல் மூலமாகவே எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை மேலும் சிறப்பானதாகவும் வலுமிக்கதாகவும் கட்டியெழுப்ப முடியும் என்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

003

Related posts: