அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Thursday, December 7th, 2017தேசிய நல்லிணக்கம் என்பது உடனடி உணவு தயாரிப்பு அல்ல. இமு;முறை வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, கல் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாலோ, பொருளாதார மையத்தினை உருவாக்குவதாலோ, கடற்றொழில், விவசாயத்தை முன்னேற்றுவதாலோ மாத்திரமே தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் எனக் கனவு காணக்கூடாது – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
இத்தகைய ஏற்பாடுகள் எமது மக்களின் பொருளாதார விருத்திகளுக்கு வழிவகுக்கும். எமது மக்களுக்கு இது அவசியம். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது மாத்திரமே போதாது. அடிப்படையிலிருந்து மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஆரம்பக் கல்வியிலிருந்து, அரசாங்க அலுவலகங்களிலிருந்து, மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதற்கு முன்பதாக இருக்கின்ற அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதைக் கொண்டு வந்தோம், இதைக் கொண்டு வந்தோம் எனக் கூறப்படுகின்றது. எதைக் கொண்டு வந்தாலும் அதில் எதை செயற்படுத்தினோம்? என்ற கேள்விக்கு பதில் தேடிப் பார்க்க வேண்டும்.
இரு மொழிக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டு, செயற்படுத்தப்படவில்லை. 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அது முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. இனவிகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென சுற்றறிக்கை கொண்டு வரப்பட்டு, அது தொடர்ந்து செயற்படுத்தப்படவில்லை. இனியும், புதிய அரசியல் யாப்பு கொண்டு வந்து, அதையாவது செயற்படுத்தப் போகிறீர்களா? என்றே கேட்கத் தோன்றுகின்றது.
முதலில், இருப்பவற்றை செயற்படுத்த முன்வாருங்கள். இருக்கின்ற அரசியல் தீர்வை முழுமையாக செயற்படுத்துங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகவே பகிர்ந்தளியுங்கள். தேசிய நல்லிணக்கம் தானாகவே எமது மக்கள் மத்தியில் ஏற்படும். அதற்காக யாரும் அரும்பாடுபடத் தேவையில்லை.
Related posts:
|
|