மீண்டும்  மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி அரம்பம்!

Saturday, January 6th, 2018

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந் திகதி பயணிகள் விமானம் புறப்பட்டது. இதில் ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது.

அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. விழுந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அருகே விமானத்தின் உதிரிபாகம் மிதந்து வந்தது. அது மலேசிய விமானத்தின் பாகம் தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் விமானம் எங்கு விழுந்தது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

விமானத்தை தேடும் பணியில் அவுஸ்திரேலிய நிறுவனம் ஈடுபட்டது. விமானத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதுவும் தனது பணியை முடித்துக்கொண்டது.

தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஓசியன் இன்பினிட்டி என்ற நிறுவனத்தின் மூலம் தேடுதல் பணிகளை செய்ய மலேசியா ஏற்பாடு செய்துள்ளது. கடலில் தேடும் பணிகளை செய்வதற்காக விசேஷ கப்பலை இந்த நிறுவனம் வைத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்த கப்பலில் உள்ளன. அதில் ஒரு கப்பல் தேடும் பணியை மேற்கொள்ள உள்ளது.

தற்போது தென்ஆப்பிரிக்காவில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல் தேடும் பணிக்காக புறப்பட்டு வருகிறது. அதில் உள்ள கருவிகள் மூலம் விமானத்தை கண்டுபிடித்து விடலாம் என்று நம்புகிறார்கள்.

Related posts: