தீயினில் சங்கமமான கவிஞர் முத்துக்குமார்!

Monday, August 15th, 2016

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல், சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு மயானத்தில் நேற்று இரவு 08.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

முத்துக்குமாரின் 9 வயது மகன் ஆதவன் இறுத்திச் சடங்குகளைச் செய்தார். முன்னதாக சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள முத்துக்குமார் இல்லத்தில் இருந்து அவரது உடல் நியூ ஆவடி சாலையில் உள்ள மயானம் வரை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. நடிகர்கள், இயக்குநர்கள், பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தமிழ் திரையுலகில் ஏராளமான பாடல்களை எழுதி இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நா.முத்துக்குமார், மஞ்சல் காமாலை நோயினால் உடல்நிலை சரியில்லாமல் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரைத்துறை, அரசியல் துறையைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கலைஞர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டனர்.

கவிஞர்கள் அப்துல்ரகுமான், வைரமுத்து, பழனிபாரதி, பா.விஜய், யுகபாரதி, சினேகன், இளையகம்பன், மதன் கார்க்கி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் சேரன், பாலா, ஷங்கர், வசந்த், வெற்றிமாறன், சசிக்குமார், நடிகர்கள் நாசர், பொன்வண்ணன், விவேக், ஜெயம் ரவி, மனோஜ் கே.பாரதி, சசிகுமார், ஜெயம் ரவி, மனோபாலா, சந்தானம், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் வெற்றிமாறன், எஸ்.பி.ஜனநாதன், ராஜு முருகன், ராம், தரணி, வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Related posts: