பாகிஸ்தான் அணிக்கு எதிராக திரில் வெற்றிபெற்ற இந்தியா!

Monday, June 10th, 2024

ஐசிசி T 20 உலகக்கிண்ணத் தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.

நியூ யோர்க்கின் நசாவ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆடுகளம் தொடர்பில் அதிகமான கவனம் செலுத்தப்பட்டதுடன், பந்துவீச்சுக்கு அதிக சாதகம் கொடுக்கும் ஆடுகளமாக இந்த ஆடுகளம் அமைந்திருந்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அதன் பின்னர் தடுமாறியது. எனவே 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ஓட்டங்களையும், அக்ஷர் பட்டேல் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் ஹாரிஷ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் 10 ஓவர் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஒருகட்டத்தில் 47 பந்துகளுக்கு 47 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டிருந்ததுரு.

எனினும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இறுதி ஓவர்களை அற்புதமாக வீச தொடங்கினர். இதில் ஜஸ்ப்ரிட் பும்ரா அற்புதமாக பந்துவீசி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் என வீழ்த்த பாகிஸ்தான் அணி நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. இறுதி ஓவரில் 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணிக்காக அதிகபட்சமாக மொஹமட் ரிஸ்வான் 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற, ஏனைய வீரர்கள் ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தங்களுடைய குழுவில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: