தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி திரட்ட உலக கிண்ண அணியினர் களத்தில்!

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் 1996ஆம் ஆண்டு உலக கிண்ண இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன்படி, இன்று 29ம் திகதி முன்னாள் அணித் தலைவர் அர்ஜுண தலைமையில் முதல் போட்டி சிட்னியில் நடைபெறும். அடுத்த போட்டி நவம்பர் 1ம் திகதி மெல்பேனில் இடம்பெறும். இந்தப் போட்டிக்கு முன்னாள் வேகப் பந்து வீ்ச்சாளர் ரவி ரத்னாயக்க தலைமைதாங்குவார். இந்தப் போட்டிக்களை இலவசமாக கண்டுகளிக்க முடியும்.
மேலும் இரண்டு விசேட வைபவங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க செய்து வருகின்றார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுசரணை வழங்குகின்றது. இது சம்பந்தமாக அசங்க குருசிங்க அண்மையில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
போட்டிகளில் கலந்துகொள்வதற்கென அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம, ஹசான் திலகரத்ன, முத்தையா முரளிதரன், பிரமோதய விக்கிரமசிங்க, சமிந்தவாஸ், ரவீந்திர புஷ்பகுமார, உபுல் சந்தன ஆகியோர் கடந்த வியாழக்கிழமை (27) அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.
தவிர்க்க முடியாத காரணங்களால் குமார் தர்மசேனவும், மார்வன் அத்தபத்துவும் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|