ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்துவது ஆபத்து – பிரபல சுழற்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/Muttiah-Muralitharan.jpg)
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முதலில் ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ஐ.பி.எல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்ததுடன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தப் போட்டியை நடத்த தயார் என்றும், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபைக்கு விரைவில் கடிதம் எழுதுவோம் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் ஐ.பி.எல் போட்டியை இலங்கையில் நடத்துவது ஆபத்து என்று முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியை இலங்கையில் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கிறது என்பதுடன், எனக்கு தெரிந்து இது ஒரு நிரந்தர தீர்வாகாது என தெரிவித்துள்ளார்.
முதலில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.
இலங்கையில் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் இலங்கைக்கு வருவார்கள். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இது மிகப்பெரிய ஆபத்தை வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|