வடக்கு, கிழக்கு பின்தங்கிய கிராமங்களில் விசேட வேலைத்திட்டம்!

Wednesday, July 4th, 2018

சமுர்த்தி பயனாளிகள் வாழும் பின்தங்கிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் கீழ் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களிலும், அனுராதபுரம், பொலன்னறுவை மொனறாகலை அம்பாந்தோட்டை போன்ற வறுமைநிலை காணப்படும் மாவட்டங்களில் அமைந்துள்ள பின்தங்கிய கிராமங்கள் போன்றவற்றில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக காணி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
பின்தங்கிய கிராமங்களில் வாழும் சமுர்த்தி பயனாளிகளை பொருளாதார ரீதியில் ஊக்குவிப்பதற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை.
இதனால் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் வசதிகள் உள்ள வரையறை, விற்பனை வசதிக்கு தேவையான இடமில்லாமை தொழில்நுட்ப வசதியை பெற்றுக்கொள்வதற்கும் உற்பத்தி தரத்தை மேம்படுத்துவதற்குமான சேவை மத்திய நிலையம் இல்லாமை, அடிப்படை வசதிகள் போதுமான வகையில் இல்லாமை போன்ற விடயங்களின் காரணமாக இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த பெறுபேறை பெற்றுக்கொள்ள முடியாமல் போனமை கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களிலும், அனுராதபுரம், பொலன்னறுவை மொனறாகலை அம்பாந்தோட்டை போன்ற வறுமைநிலை ஆகக்கூடுதலாக காணப்படும் மாவட்டங்களில் அமைந்துள்ள பின்தங்கிய கிராமங்கள் போன்றவற்றில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக சமூக ஊக்குவிப்பு அமைச்சர் பி.ஹரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.

Related posts: