மோசமான காலநிலை – கோழி இறைச்சி குறித்து இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது நுகர்வோர் அதிகாரசபையின் பொதுப் பணியாளர் ஒன்றியம்!

Tuesday, June 11th, 2024

கோழி இறைச்சி நுகர்வு தொடர்பில்  இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொதுப் பணியாளர் ஒன்றியத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல பிரதேசங்களில் உள்ள கோழிப்பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து,

இறந்த கோழிகளில் இருந்து கோழி இறைச்சியை சுத்தம் செய்து சந்தைக்கு வெளியிடும் மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இறந்த கோழிகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது,

இது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் சேவை அதிகார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சாதாரண ஆரோக்கியமான கோழி இறைச்சி வெள்ளை நிறத்திலும்,  வெள்ளத்தில் இறந்த கோழிகளின் இறைச்சி சிவப்பு நிறத்திலும் இருப்பதால் நுகர்வோர் அவற்றை அடையாளம் காண முடியும் என்று ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கோழி இறைச்சியின் நிறம் தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும், ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் இவ்வாறான கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான சில கடைகளில் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: