நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து!

மல்லாவி பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள மல்லாவி நகரப் பகுதியில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த உணவகம் ஒன்றினை மூடி அதன் வியாபார அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி செல்வநாயம்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மல்லாவி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 6 ஆம் திகதி புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அமர்வுகள் துணுக்காய் சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே நீதிபதியினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது:
மல்லாவி நகரப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கி வந்த உணவகம் ஒன்றினை மல்லாவி பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது சுகாதார விதி முறைகளை மீறி செயற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு துணுக்காய் சுற்றுலா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதியினால் உணவகத்தினை மூடி அதன் வியாபார அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்த உத்தரவை நீதிபதியிடம் உரிமையாளர் விடுத்த கோரிக்கையை அடுத்து உணவகம் நடைபெற்ற வர்த்தக நிலையத்தில் பல்பொருள் வியாபாரத்தை மேற்கொள்ள நீதிமன்றத்தினால் மனிதாபிமான ரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்யும் வகையில் உணவகத்தின் உரிமையாளர் மீண்டும் உணவகத்தை ஆரம்பித்து சுகாதார சட்ட விதிகளை மீறி செயற்பட்டு வந்த நிலையில் மல்லாவி பொதுச் சுகாதார பரிசோதகர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு துணுக்காய் சுற்றுலா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது நீதிபதியினால் உணவகத்தினை மூடிவிடுமாறும் அதன் வியாபார அனுமதியை இரத்துச் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.
Related posts:
|
|