கலவரங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவிப்பு!

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக .பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நிட்டம்புவ பகுதியில் மூவரும், வீரக்கெட்டிய பகுதியில் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதேவேளை நேற்றையதினம் இலங்கையில் வெடித்த கலவரங்களின் காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.
இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டின் மீது நேற்று இரவு போராட்டக் காரர்களால் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் சரத் குமார படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நேற்று வெடித்த கலவரங்கள் காரணமாக பல முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன, இவற்றுள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவி இரு வீடுகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் இடம்பெற்ற மோதலில் 231 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய (09) மோதலில் காயமடைந்த 218 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்பதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் நேற்று (09) பிற்பகல் நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நீர்கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|