பாதுகாப்பற்ற ரயில் கடவை பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

எமது நாட்டில் குறிப்பாக வடக்கு நோக்கிய ரயில் கடவைகள் பலவும் பாதுகாப்பற்றனவாகவே இன்றும் இருந்து வருகின்றன. இதனால் தொடர்ந்தும் பல விபத்துகள் ரயில் கடவைகளில் இடம்பெற்று வருகின்றன.
வடக்கிற்கான ரயில் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ் திணைக்களத்தினால் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பிற்காக பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
எனினும் இதுவரையில் இவர்களது தொழில் ஒரு தொழிற்துறையாக ஏற்றுக் கொள்ளப்படாமலும், நிரந்தரமாக்கப்படாமலும் இருக்கின்றது. அத்துடன் இவர்களுக்கான மாதக் கொடுப்பனவு என்பது இவர்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள இயலாத வகையில் மிகவும் சொற்பமான ஒரு தொகையாகவே இருந்து வருவதுடன் விடுமுறைகள்கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.
மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்புப் பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் பலமுறை இந்தச் சபையில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே மேற்படி பணியாளர்களை இலங்கை புகையிரதத் திணைக்களத்துடன் இணைத்து அவர்களது தொழிலை நிரந்தரமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டக் கொள்கின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டளை 203ஆம் அத்தியாயம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொணடு கருத்துத தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|