விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய நபர்களின் படுகொலை – விசாரணை அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்போம் – நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்!
Monday, March 17th, 2025
விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என பட்டலந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பட்டலந்த சித்திரவதை முகாமினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
அரசாங்கம் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்ததை போன்று பிரதான மூன்று படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விஜயகுமாரதுங்க படுகொலை உட்பட முக்கிய படுகொலைகள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்போம்.
1989 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுதந்திர கட்சியின் 6300 உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்காதா,
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனையும் ஆராய வேண்டும்.
மேலும் தமிழர்களுக்கு எதிரான இன கலவரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கட்டவிழ்த்துவிட்டது. தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் இன்று இனநல்லிணக்கம் பற்றி பேசுகிறார்கள் என்றார்.
000
Related posts:
|
|
|


