வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறுபவர்கள் மூன்று வருடங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் எனவும் தெரிவிப்பு!
Monday, March 24th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்டச் செயலகங்களிலிருந்து பெறப்படும் வரிசையில், வாக்குச் சீட்டுகள் தொடர்பான விபரங்கள் அச்சகத்திற்கு அனுப்பப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறுபவர்கள் மூன்று வருடங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் என பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட 150க்கும் அதிகமான வேட்பாளர்கள் உரிய திகதிக்கு முன்னதாக தங்களது செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர்.
இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 80,000 ற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் குறித்த வேட்பாளர்களில் எவரேனும் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை உரிய திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வாக்களிப்பதற்கான மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையை இழக்க நேரிடும். அத்துடன், 1,000,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
எனவே, செலவு அறிக்கை தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துமாறு சகல வேட்பாளர்களையும் பெப்ரல் அமைப்பு கோருவதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|
|


