சமூக ஊடகங்கள் பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிற துறையாக உருவாகிவிட்டது – ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ்!  

Friday, December 20th, 2024

சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்று பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிற ஒரு துறையாக உருவாகிவிட்டது. இதேநேரம் சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக எனது பெயரை பயன்படுத்தி அவர்கள் வருமானம் பெற்றுக்கொள்வதால், அவர்களின் வருமானத்தை தடுக்க விரும்பாததால், அவர்களின் வீடியோக்களை நான் பெரிது படுத்தவில்லை என சுட்டிக்காட்டிய முன்னாள் கடற்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா “டக்ளஸின் வீழ்ச்சிக்கும், அநுராவின் எழுச்சிக்கும்” சமூக வலைத்தளங்களே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நேற்று வியாழக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னைய காலங்களில் செய்திகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஊடாகவே பார்க்க முடியும். தற்போது  மலசல கூடம் முதல் படுக்கையறை வரையில் தத்தமது வேலைகளை முற்கொண்டவாறு வீடியோக்களை செய்திகளை பார்க்க கூடிய நிலைமை இருப்பதால், அது இலகுவில் மக்கள் மத்தியில் சென்றடைகிறது.

இவ்வாறான சமூக ஊடகங்கள் ஊடாகவே என் மீது அவதூறுகள் பரப்ப பட்டன. குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பினார். அவர் நாவற்குழி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசத்தை நிரப்பி அங்கு ஒரு பெற்றோல் செட் போட முனைந்தார். அதற்காக என்னிடம் உதவி கோரினார்.

அந்த இடத்தை நிரவினால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதுடன், அது பெற்றோல் செட் போடுவதற்கு உகந்த இடமில்லை என்பதனால், அதற்கு நான் அனுமதி பெற்றுக்கொடுக்க உதவவில்லை.

இதேவேளை, கட்சியின் நிதி தேவைக்காக அவருடன் சில வர்த்தக உறவுகளையும் பேணி வந்தேன். ஆனால் அவர் நேர்மையற்றவராக முறைகேடுகளில் ஈடுபட்டமையால், அவருடனான வர்த்தக உறவை கைவிட்டேன். அதனாலேயே, அவர் என்மீது தேர்தல் காலத்தில் அவதூறுகளை பரப்பினார்.

அதனடிப்படையில் எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அமைச்சராக இருந்த போது, தலைக்கு மேல் வேலை இருந்தது. தற்போது அது இல்லை.

இதனால் கட்சிக்குள் உள்ள குறைப்பாடுகளை நீக்க அது தொடர்பில் ஆராய்கிறோம். குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கட்சியின் கொள்கை தொடர்பில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அத்துடன் மிக விரைவில் கட்சியின் தேசிய மாநாட்டையும் நடாத்த உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
நகரசபை கொட்டிய கழிவுக்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவி...
ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ் மாநகர சபை குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எதையும் ம...

இளம் சந்ததியினர் தடம் மாறிச் செல்ல இருந்த தமிழ் தலைமைகளே காரணம் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தே...
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாத...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வேலணை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அற...