கலாநிதி மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமானவை – இரங்கல் செய்தியில் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, December 27th, 2024

இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தன்னுடைய 92 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அழிவு யுத்தத்தினால் எமது தேசம் அழிந்துபோய் இருந்த நிலையில், அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அவர்களை சந்தித்து, எமது மக்கள் எதிர்கொண்டிருந்த அவலங்ளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தெளிவுபடுத்தும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்து.

எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை ஏற்றுக்கொண்ட மன்மோகன் சிங் அவர்கள், உடனடியாகவே ஆக்கபூர்வமான தீர்மானங்களை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கி இருந்தார்.

அதனடிப்படையிலேயே, 50,000 வீட்டுத் திட்டம், யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கான சர்வதேச தரத்திலான கலாசார மண்டபம், வடக்கிற்கான புகையிரத பாதை புனரமைப்பு, பலாலி விமான நிலைய அபிவிருத்தி உட்பட்ட பல உட்கட்டுமான உதவிகளை வழங்கியதுடன், எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக நல்லின கால்நடைகளையும், குறுகிய காலத்தில் அதிகளவான விளைச்சலை தரக்கூடிய வினைத்திறன்களை கொண்ட உணவுத் தாவர விதையினங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள் போன்ற பல்வேறு உதவித் திட்டங்கள் அப்போது எமது மக்களுக்கு கிடைத்திருந்தன.

அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் தன்னுடைய வரையறைக்கு உட்பட்ட வகையில் கரிசனையை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

அத்தகைய ஒருவரின் இழப்பானது இந்திய தேசத்திற்கு மாத்திரமன்றி ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், அன்னாருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாகவும் அனைத்து இலங்கையர் சார்பாகவும் என்னுடைய இறுதி மரியாதையை செலுத்துவதுடன், அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் எனது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

Related posts: