உரிய முறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் – நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!

Tuesday, July 29th, 2025

உரிய முறையில் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரமே எதிர்காலத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், 75 விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 22 மாதிரிகளில் பிற பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுகர்வோர் தரமான தேங்காய் எண்ணெய்யைப் பெறுவதனை உறுதிப்படுத்தும் வகையில், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியன இணைந்து, உரிய முறையில் பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கத் தீர்மானித்துள்ளன.

இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அனைத்து பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்களும் எஸ்.எல்.எஸ். தர முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

00

Related posts: