ஆஸியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை!
Monday, February 16th, 2026
…
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த ட்ராவிஸ் ஹெட் 56 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 54 ஓட்டங்களையும் விளாசினர்.
எனினும், மத்திய வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணியால் 200 ஓட்டங்களைக் கடக்க முடியாமல் போனது.
ஜோஷ் இங்கிலிஸ் 27 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
குறிப்பாக, போட்டியின் பிற்பகுதியில் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
அதன்படி, 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதேபோல், குசல் மெந்திஸ் 50 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 28 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.
அதன்படி, இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது
Related posts:
|
|
|


