பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மையங்களாக்குவது பொருத்தமாக அமையாது – ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Monday, April 27th, 2020

வடக்கு மாகாணத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது தொடர்பில் மக்களிடைய எழுந்துள்ள அச்ச உணர்வை அடுத்து ஏற்பட்டுள் குழப்ப நிலைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களுடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் குறித்த நபர்களை தனிமைப்படுத்துவதற்கு போதியளவான இடவசதிகள் இன்மை காரணமாக பல பாடசாலைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதுடன் அந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பும் இருந்துவருகின்றது.

இந்நிலையில் மக்களின் உணர்வுகளை கருத்திற் கொண்டு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ளவர்களை தனிமைப் படுத்துவதற்கான முகாங்கள், மக்கள் அச்சப்படாத வகையிலும் மக்கள் குடியிருப்புக்கள் அற்ற பொருத்தமான இடங்களில் அமைக்கப்படுவதே பொருத்தமாக அமையும் எனவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: