குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் – தாஜ் சமுத்ரா ஹோட்டல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

Friday, July 12th, 2019

கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தில், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அங்கு காலையுணவு உண்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழு கோரியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தா குமாரசிறி இதனை தெரிவித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி பல இடங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகள், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை ஏன் கைவிட்டனர் என்ற கேள்விக்கான விசாரணைகளை முன்னெடுக்க இந்தப் பட்டியல் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: