வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாடாளுமன்றில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, August 24th, 2016

வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ மத விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் ஏ. ஈ. அமரதுங்ஹ அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் இது குறித்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வன்னேரிக்குளமானது கிளிநொச்சி நகரிலிருந்து 24 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இக் கிராமம் இயற்கை வளங்கள் நிறைந்த கிராமமாகும். பலவகையான பறவைகள், யானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பலவகை மரங்கள் உள்ள இயற்கைக் காடுகள், அழகிய குளக்கரை என்பன அமைந்த கிராமமாக இக் கிராமம் காணப்படுகின்றது.

கடந்த 2015ம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து இக் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைப்பதற்கென 06 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தும், காணி இனங்காணப்படாமை காரணமாக அந்த நிதி திரும்பிச் சென்றுவிட்டது.

இந்த கிராமத்தில் சுற்றுலாத்துறை மையமொன்றை அமைத்தால் அது சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரக்கூடியதாக அமையும். அத்துடன், இதனூடாக அக் கிராம மக்களின் பொருளாதார நிலையை மேலும் அதிகரிக்கவும், அதன் மூலம் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பினை வழங்கவும் முடியும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: