எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா’ நிதி யாருக்கு விடுவிக்கப்படுகின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, August 23rd, 2019

தேசிய பாதுகாப்பிற்கு பாதகம் வருகின்ற நிலையில், முப்படைகளைக் கொண்டு, தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதுபோன்று, ஒரு நாட்டில் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு பாதகம் வருகின்ற நிலையில், அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு அரச நிதி நிறுவனங்களைக் கொண்டே அந்த ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியள்ளது.

மக்கள் வங்கி திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகின்ற நிலையில், மக்கள் வங்கியையும் இந்த அரசு விற்கப் போகிறது என்ற குரலே இன்று நாடளாவிய ரீதியில் ஓங்கி எழுந்து நிற்கின்றது.
ஆனால், அப்படியல்ல, மக்கள் வங்கியின் மூலதனத்தை விருத்தி செய்வதற்காகவே இந்தத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரச தரப்புக் கூறுகின்றது. இந்த அரச தரப்பு இப்படிக் கூறினாலும், எப்படிக் கூறினாலும் அதை நம்புகின்ற அளவிற்கு இந்த நாட்டு மக்கள் இல்லை. ஏனென்றால், ஒன்றைக் கூறி, இன்னொன்றைச் செய்வதே இந்த அரசின் செயற்பாடுகளாக இருந்து கொண்டிருப்பதாகவே எமது மக்கள் நம்புகின்றனர்
1961ஆம் ஆண்டு அப்போதைய வாணிப, வர்த்தக, உணவு மற்றும் கப்பற்துறை அமைச்சராக இருந்த அமரர் டீ. பீ. இலங்கரத்ன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 29ஆம் இலக்கச் சட்டத்தின் ஊடாக கூட்டுறவு சமஸ்ரி வங்கியானது மக்கள் வங்கியாக மாற்றப்பட்டு, 50 ரூபாவினைக் கொண்டதான 1 இலட்சத்து 20 ஆயிரம் பங்குகளைக் கொண்ட ஆரம்ப நிதியான 60 இலட்சம் ரூபாவினைப் பயன்படுத்தி வங்கி பலப்படுத்தப்பட்டது.

இந்த பங்குகளின் பாதியை அரசு பெற்றுக் கொண்டதுடன், ஏனைய பங்குகளை நாடளாவிய ரீதியில் செயற்;பட்டிருந்த கூட்டுறவுச் சங்கங்கள் பெற்றிருந்தன.

இந்த வங்கியானது கூட்டுறவுச் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களும், அரசும் இணைந்து மேற்கொள்கின்ற நிறுவனம் என்பதால் ஆரம்ப நிதி என்ற வகையில் தனிப்பட்டவர்களது நிதியினைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் 738 கிளைகளைக் கொண்டு, தனது சேவைகளை மிகவும் சிறந்த முறையில் மேற்கொண்டு, வெற்றிகரமாக இந்த மக்கள் வங்கி செயற்பட்டு வருகின்றதாகவே அறிய முடிகின்றது.

அத்துடன், அரசின் கூட்டிணைந்த நிதியத்திற்கு வருடந்தோறும் மக்கள் வங்கியானது 5 பில்லியன் போன்ற பாரியதொரு தொகையினை வழங்கி வருவதாகவும், இதற்கு மேலதிகமாக வரி என்ற வகையிலும் பாரியதொரு தொகையை வழங்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த வருடத்தில் மாத்திரம், மக்கள் வங்கி, இலங்கை வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளின் மூலமாக 50 பில்லியனுக்கும் அதிகமான நிதி அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் மக்கள் வங்கி மாத்திரம் 19.8 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய இலாபத்தினை இந்த வங்கி ஈட்டி வருகின்ற நிலையில், மக்கள் வங்கியிடமுள்ள சொத்துக்களை அதிகரிக்கின்ற வகையில் பங்கு நிதியினை ஒன்று திரட்டுவதற்கும், தொகுதிக் கடன்களை வழங்குகின்ற வரையறையை மேலும் அதிகரிப்பதற்குமாக இந்தத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் இந்த நாட்டில் இலாபம் தராத அரச நிறுவனங்களே விற்கப்பட்டு வந்தன. இப்போது, அரசுக்கு நிறையவே இலாபம் தருகின்ற நிறுவனங்களும் விற்கப்பட்டு வருகின்றனவா? என்ற கேள்வி அரச காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலிருந்து எழுகின்றது.

இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலமாக இரண்டாம் தர மூலதனத்தைப் பெற்றுக் கொள்வதற்கென தொகைக் கடன்களை விநியோகிப்பதே எதிர்பார்ப்பு என்றும், எவ்வகையிலேனும், பங்கு விற்பனைகள் நடைபெற மாட்டாது என்றும் மக்கள் வங்கியின் நிர்வாகத் தரப்புக் கூறுவதாகவும், அதேநேரம், பணியாளர்களுக்கும், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கும் பங்குகள் விநியோகிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

மக்கள் வங்கிச் சட்டத்தின் 13வது சரத்தினைப் பார்க்கின்றபோது, ‘கூட்டுறவுச் சங்கமோ அன்றி உத்தியோகபூர்வ நிலைமையின் பிரகாரம் திறைசேரியின் செயலாளர் அல்லாத நபருக்கு வங்கியின் எந்தவொரு பங்குதாரர்களாலும் தமது பங்குகள் விற்பனை செய்யக்கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
வங்கியின் மூலதன சிக்கல்கள் இருப்பின் அதனைத் தீர்த்து வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகவே இருத்தல் வேண்டும். அந்த வகையில் கடந்த வருடம் இலங்கை வங்கிக்கு அரசாங்கம் 5 பில்லியன் நிதியை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனவே, அத்தகையதொரு ஏற்பாட்டினை மக்கள் வங்கி தொடர்பிலும் மேற்கொள்ள இயலும்
அத்தகையதொரு நிலை இருந்தும், தொகைக் கடன்களை விநியோகிப்பது, பங்குகளை விநியோகிப்பது போன்ற ஏற்பாடுகளை மக்கள் வங்கி தொடர்பில் மாத்திரம் மேற்கொள்ளத் துடிப்பதே இங்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும், இந்தத் திருத்தச் சட்டத்தின் 20 (1)ஆம் சரத்தின் பிரகாரம் மத்திய வங்கிக்கு இருந்த தலையீட்டு உரிமம் இல்லாது செய்யப்பட்டும், 21 (1) (ஆ), 21 (3) (1) (ஆ) மற்றும் 43 (2) (இ) போன்ற சரத்துகள் நீக்கப்பட்டும் உள்ளன. அந்தவகையில், மத்திய வங்கிக்கு உரிய தலையீட்டு அதிகாரங்களை நீக்குவதற்கு முயல்வது ஏன்? என்பது பலத்த சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருக்கின்றது.
1961 – 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் 12 (1) சரத்தினைப் பார்க்கின்றபோது, ‘வங்கியின் பங்கு மூலதனமானது, ஒரு பங்கு ஐம்பது ரூபா வீதமான ஒரு இலட்சத்து இருபதாயிரம் பங்குகளாகப் பிரிக்கப்பட்ட அறுபது இலட்சம் ரூபாவாக இருத்தல் வேண்டும். எனினும், அதற்கென பிரதிநிதித்துவ மந்திரி சபையின் மூலமாக நிறைவேற்றப்பட்ட ஆலோசனைக்கமைவாக பங்கு நிதியானது காலத்திற்குக் காலம் அதிகரிக்கப்பட இயலும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரத்து மேற்படி திருத்தச் சட்டத்தில், ‘வங்கியின் அதிகாரமளிக்கப்பட்ட மூலதனம், ஒவ்வொன்றும் ஐம்பது ரூபா கொண்ட ஒரு பில்லியன் பங்குகளாகப் பிரிக்கப்பட்ட ஐம்பது பில்லியன் ரூபா ஆதல் வேண்டும்’ எனத் திருத்தப்பட்டுள்ளது.

இவற்றைப் பார்க்கின்றபோது, இவ்வாறு, மக்கள் வங்கியின் பணியாளர்களுக்கும், கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்வோருக்கும் பங்குகளை விநியோகிப்பது என்ற பெயரில், மக்கள் வங்கிப் பணியாளர்களது எதிர்ப்பினை சமாளித்துக் கொண்டு, மக்கள் வங்கியை விற்பதற்கான ஓர் ஏற்பாடே இதுவென, மேற்படி திருத்தச் சட்டம் உணர்த்துவதாகவே மக்களிடையே ஒரு சந்தேகம் நிலவி வருகின்றது.

நாட்டில் பாரிய நட்டங்களுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்ற பல அரச நிறுவனங்களுக்குத் திறைசேரி இன்னமும் நிதியினை வழங்கி வருகின்ற நிலையில், இலாபம் ஈட்டுகின்ற ஒரு அரச வங்கியின் மூலதன விருத்திக்கென இத்தகைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முயல்வதே மக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாகவும் இருக்கின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இத்தகைய நிலையில், சில நியாயமான கேள்விகளை இலங்கை, வங்கி ஊழியர் சங்கத்தினர் எழுப்புகின்றனர்.

அந்த வகையில், உத்தேச மக்கள் வங்கித் திருத்தச் சட்டத்தின் உண்மையான தேவை என்ன? என்பது பற்றிய கேள்வி எழுகின்றது.இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் வங்கியின் அரச உரிமத்திற்கு எவ்விதமான பாதிப்புகளும் – அழுத்தங்களும் ஏற்படாது என்பதை உரிய வகையில் அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும்.

மேற்படி சட்டத் திருத்தம் ஊடாக விநியோகம் செய்வதற்கு எதிர்பார்ப்பு கொண்டுள்ள தொகைக் கடன்கள், ஒப்படைக்கத்தக்க தொகைக் கடன்கள் ஆகுமெனில் அவை ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பங்குகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டா? என்பது குறித்து முன்கூட்டிய தெளிவுகளை அரசு தர வேண்டும்.

ஏதேனும் ஒரு வகையில் அவ்வாறு பங்குகளாக மாற்றம் பெறுகின்ற நிலையில், மக்கள் வங்கியின் அரச உரிமத்திற்குப் பாதிப்புகள் ஏற்படுமா? என்பது தொடர்பிலும், அரசு மக்கள் வங்கி தொடர்பிலான பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றதா? என்பது தொடர்பிலும் தெளிவுகள் தேவை.

2018 வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம், அரச வங்கிகளின் அரச பங்குகளைத் தனியாருக்கு விற்கின்ற திட்டமானது, மக்கள் வங்கியிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றதா? என்கின்ற வங்கி ஊழியர்களது கேள்விக்கு அரசு பதில் வழங்க வேண்டும்.

‘எண்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ என்கின்ற திட்டம் தொடர்பிலும் பாரிய அளவில் நிதி விடுவிக்கப்பட்டு வருவதாகவும், இது எதுவரையில் போய் நிற்குமோ தெரியாது என்றும், இதன் காரணமாகவும் வங்கிக் கட்டமைப்புகள் சிதைவுறும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால், எங்களது பகுதிகளைப் பொறுத்தவரையில், மேற்படி திட்டத்திற்கென வங்கிக்கு போனால், அங்கே நிதிக்குப் பதிலாக எமது மக்களை இழுத்தடிக்கின்ற நடவடிக்கைகளே தொடர்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, மேற்படி பாரியளவிலான நிதி யாருக்கு விடுவிக்கப்படுகின்றது? என்ற கேள்வி எழுகின்றது. இது தேர்தல் நடவடிக்கைக்கான முதலீடா? அல்லது பொறுப்பானவர்களது உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கானதா? என்ற சந்தேகமே எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. நீங்கள் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தாலும், எமது மக்களுக்கு அவற்றில் மாற்றாந்தாய் மனப்பான்மையே இன்னும் தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றது
எமது பிரச்சினைகளை நாம்தான் தீர்க்க வேண்டும். எமது மக்களது பிரச்சினைகளை அரசுதான் தீர்க்க வேண்டும். அதைவிடுத்து, சர்வதேச சமூகம் தீர்க்க வேண்டும் என இடித்துரைத்துக் கொண்டும், எடுத்துரைத்துக் கொண்டும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.

இதுவரையில், கிடைத்திருந்த நல்ல சந்தர்ப்பங்களை எல்லாம் கைநழுவ விட்டுவிட்டு, இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறிக் கொண்டு, இந்த அரசாங்கத்திற்கே முட்டுக் கொடுத்துக் கொண்டு, இந்த அரசே எல்லாவற்றையும் தமிழ் மக்களுக்கு செய்து கொடுக்கும் எனக் கூறிக் கொண்டு, இந்த அரசைக் கொண்டு, தங்களது சுயநலன்களை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டு இன்று தேர்தலென வரும்போது, அரசாங்கத்தை நம்ப முடியாது என்றும், சர்வதேச சமூகமே அழுத்தங் கொடுக்க வேண்டும் என இந்தப் பணப் பெட்டி தமிழ் அரசியல்வாதிகள் இன்று மீண்டும் கூறத் தொடங்கிவிட்டார்கள்.

பல்வேறு இக்கட்டான நிலைமைகளில்கூட வெறும் பார்வையாளர்களாகவே சர்வதேச சமூகம் இருந்துள்ளதை எமது மக்கள் மறந்துவிடவில்லை. அரசியல் என்பது தமிழ்த் தரப்புப் பணப்பெட்டி அரசியல்வாதிகளுக்கு வாழ்வாதாரமாகவும், எமது மக்களுக்கு இவர்களது இந்த அரசியலே சாவாதாரமாகவும் இருக்கின்றது.

சர்வதேச சமூகத்திற்கு இடித்துரைக்கின்ற இந்தப் பணப்பெட்டி தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள், இவர்கள் பங்கெடுத்திருக்கின்ற இந்த அரசை முதலில் பிடித்துரைத்திருக்க வேண்டும்.

அரசிடம் போய் தங்களுக்கென நிதி பெற்றுக் கொண்டு, அரசு தமிழ் மக்களுக்கு நீதி வழங்கவில்லை எனக் கூறிக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Related posts:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதில் தாமதம்: நிலையை சீர்செய்யுமாறு...
அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் - நாடாளுமன்றில்...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் ...
அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!