300 முதலைகள் கொன்று குவிப்பு – இந்தோனேசியாவில் சம்பவம்!

Tuesday, July 17th, 2018

இந்தேனேசியாவில், முதலை பண்ணையில் இருந்த சுமார் 300 முதலைகளை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கொன்று குவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நாட்டின் பப்புவா மாகாணத்தில், தனது கால்நடைகளுக்காக புல் சேகரித்துக் கொண்டிருந்த 48 வயது நபர், அந்தப் பகுதியிலிருந்த முதலைப் பண்ணைக்குள் தவறி விழுந்தார். அதையடுத்து, அங்கிருந்த முதலைகளில் ஒன்று, அவரது காலில் கடித்ததுடன் தனது வாலால் ஓங்கி அடித்ததில் அவர் உயிரிழந்தார்.

இதனால் கோபமடைந்த ஊர்வாசிகள், உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு முடிந்தவுடன் அந்தப் பண்ணைக்கு வந்து, நூற்றுக்கணக்கான முதலைகளைக் கொன்று குவித்தனர்.

இதுகுறித்து பண்ணை அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தும் கோபம் அடங்காத அந்தக் கும்பல், முதலைகளைக் கொன்றதாகத் தெரிவித்தனர்.

முதலைகள் கொல்லப்படும்போது வனப் பாதுகாப்பு அதிகாரிகளும், போலீஸாரும் அங்கு இருந்தாலும், அவர்களைவிட கூட்டத்தினரின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் அவர்களைத் தடுக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Related posts: