வங்கதேசத்தில் கணனி வழியாக ரூ.535 கோடி திருட்டு!

Friday, May 20th, 2016

வங்காளதேசத்தில் மத்திய வங்கி அதிகாரி ஒருவரின் கணனி வழியாக சட்டவிரோதமாக புகுந்து 81 மில்லியன் டொலர் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மணிலாவில் வங்காளதேச தூதர் ஜான் கோம்ஸ் நிருபர்களை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, வங்காளதேச மத்திய வங்கி அதிகாரியின் கணனியில் திருட்டுத்தனமாக புகுந்து பணத்தை கொள்ளையடித்தவர்கள் தற்போது அந்த பணத்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பிடம் தகவல் பரிமாறப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு விசாரணையை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களும் அல்ல வங்காளதேசத்தினரும் அல்ல என அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, இந்த இணையவழி திருட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த யாருக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என குறிப்பிட்டார்.

கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் தொடர்ந்து மோசடியான தகவல்களை டாக்கா மத்திய வங்கியில் இருந்து அனுப்புவது போன்று, ஒருபில்லியன் டொலர்களை நியூயார்க்கில் இருக்கும் மத்திய வங்கிக்கு பரிமாற்றம் நடத்த அனுப்பி வந்துள்ளது.

இதில் பெரும்பாலானா கோரிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில் 81 மில்லியன் டொலர்கள் மட்டும் இந்த கொள்ளையில் பறிபோயுள்ளது. வரலாற்றில் இணையவழியில் இப்படி ஒரு பெரிய தொகை திருடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.

Related posts: