மன்னிப்பு கேட்ட சூர்யா!

Monday, May 16th, 2016

 நடிகர் சூர்யா தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்குபோட வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், தற்போது அவராலேயே வாக்குப் போட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

 

வெளிநாடு சென்றுள்ள அவர், தேர்தல் நடைபெறும் தேதியில் சென்னைக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவரால் இந்த தேர்தலில் வாக்கு போட வரமுடியவில்லை. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அதில் அவர் கூறி இருப்பதாவது:- ‘24’ படத்திற்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும், ஆதரவுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னிடம் மன்னிப்பையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். அது எனக்கு குற்றவுணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

 

வாக்களிக்கும் உரிமையை, கடமையை அனைவரும் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான்இதுவரை ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய வாக்குரிமையை செலுத்தாமல் நான் இருந்தது இல்லை. இந்த முறை வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு முதல்நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்று பயண திட்டம் வகுத்திருந்தேன். ஆனால், நானே எதிர்பார்க்காத சூழல், என் பயணத்தைத் திட்டமிட்டப்படி மேற்கொள்ள இயலவில்லை.

 

என் சூழ்நிலையை விளக்கி, அஞ்சல் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சியையும் மேற்கொண்டேன். சட்டப்பூர்வமான வழிகள் எதுவும் இல்லை. மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன்.

 

அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதிற்காக, அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

என் மீது அன்பு கொண்ட அனைவரும், என்னை புரிந்து கொள்ளவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: