புகையிரதம் தடம்புரள்வு – 7 பேர் பலி!

Monday, February 4th, 2019

பீகாரின் ஜோக்பனி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் நோக்கி சென்றுகொண்டிருந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் புகையிரதம் மேஹ்னார் சாலை பகுதியை கடந்து சஹதாய் பஜர்க் பகுதியருகே வந்தபோது பலத்த சத்தத்துடன் தடம் புரண்டுள்ளது.

இதன்போது புகையிரதத்தின் 9 பெட்டிகள் தடம் புரண்டதில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடம் புரண்ட புகையிரத பெட்டிகளில் 3 படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் (எஸ் 8, எஸ் 9, எஸ் 10), ஒரு பொது பெட்டி மற்றும் ஒரு ஏ.சி. (பி 3) பெட்டி ஆகியவையும் அடங்கும்.

பீகாரில் இருந்து டெல்லி செல்லும் ரயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வது வழக்கம். அவர்கள் முறையாக முன்பதிவு செய்வது இல்லை. இதனால் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள், பலியானோர் அல்லது காணாமல் போனவர்கள் ஆகியோரை பற்றிய அடையாளங்களை காண்பது என்பது கடினம் நிறைந்த ஒன்றாக அதிகாரிகளுக்கு அமைந்துள்ளது.

பல பயணிகள் கவிழ்ந்து கிடக்கும் பெட்டிகளுக்குள் சிக்கி உள்ளனர் என சம்பவத்தினை கண்டவர்கள் கூறியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே புகையிரத விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் புகையிரதம் தடம் புரண்ட பகுதியில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் நிதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: