தேசத்துரோக வழக்கு : முஷரப் சொத்துக்கள் பறிமுதல் –  பாகிஸ்தான் கோர்ட்டு அதிரடி உத்தரவு!

Thursday, July 21st, 2016

தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், முஷரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கிக்கணக்குகளை முடக்கவும் பாகிஸ்தான் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

பாகிஸ்தானில் 2001–2008 காலகட்டத்தில் அதிபராக இருந்து கொடி கட்டிப்பறந்தவர், பர்வேஸ் முஷரப் (வயது 72).
இவர் தனது ஆட்சிக்காலத்தில் 2007–ம் ஆண்டு, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசியல் சாசனத்தை இடைநீக்கம் செய்தார். தற்போது ஜனநாயக ரீதியிலான ஆட்சி வந்தபிறகு, அவர் மீது கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கிலும் முஷரப் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம், அவர் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அவர் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் துபாய்க்கு சென்றார். சிகிச்சை முடிந்து அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் நாடு திரும்புவேன் என அப்போது கூறினார். ஆனால் அவர் இன்னும் துபாயில்தான் உள்ளார்.

இந்த நிலையில், அவர் மீதான தேசத்துரோக வழக்கு பெஷாவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மசார் ஆலம் மியான்கேல் தலைமையிலான தனிக்கோர்ட்டில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு முஷரப் ஆஜராகவில்லை. மீண்டும், மீண்டும் நோட்டீசுகள் அனுப்பியும் முஷரப் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகதது, கோர்ட்டின் கண்டனத்துக்கு வழிவகுத்தது.

அவரது சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘எனது கட்சிக்காரர் முஷரப்புக்கு உடல்நிலை சரியில்லை. அவர் தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வாக்குமூலத்தை ஸ்கைப் வழியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். ஆனால் அதை கோர்ட்டு நிராகரித்து விட்டது.

இதுபற்றி நீதிபதி மசார் ஆலம் மியான்கேல் கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாத நிலையில் மேல் விசாரணை நடத்த முடியாது’’ என கூறினார்.மேலும், ‘இந்த வழக்கில் அவர் ஆஜராகாத நிலையில், முஷரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கிக்கணக்குகளை முடக்கவும் உத்தரவிடுவதைத் தவிர கோர்ட்டுக்கு வேறு வழியில்லை’ என கூறி அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றி அது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.  முன்னதாக முஷரப்பின் ஜாமீன் பத்திரங்களை தனிக்கோர்ட்டு ரத்து செய்தது. அவருக்கு ஜாமீன் வழங்க பிணைப்பத்திரம் அளித்த ரஷீத் குரேஷி ரூ.25 லட்சத்தை டெபாசிட்டாக கோர்ட்டு பதிவாளரிடம் செலுத்தவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுகள், பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related posts: