டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரான் சதித்திட்டமாம் – அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்!

Wednesday, July 17th, 2024

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரான் தரப்பில் சதித்திட்டம் இடம்பெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவரது பாதுகாப்பு பல வாரங்களுக்கு முன்னரே அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இலக்கு வைத்து பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கும் ஈரானுக்கும் தொடர்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அன்றையதினம் துப்பாக்கிச் சூட்டை நடத்திய 20 வயதான சந்தேக நபரால் எவ்வாறு டொனால்ட் ட்ரம்ப்பை நெருங்க முடிந்தது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஈரானிய அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவை முன்னதாக டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அறியப்படுத்தியிருந்தது.

இதனையடுத்து அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஈராக்கில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரானின் படைப்பிரிவொன்றின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டமைக்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் போம்பியோ ஆகியோருக்கு எதிராக ஈரானிய அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: