ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி!

Wednesday, September 1st, 2021

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.உடல்நலக் குறைவு காரணமாக விஜயலட்சுமி சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவம் பலனின்றி இன்று (செப்டம்பர் 1) காலமானார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஓ. பன்னீர்செல்வம், அவரது மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அங்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் அதிமுக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஓபிஎஸ் மனைவி இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

000

Related posts: