இலத்திரனியல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் – ஒடிசா விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் பிரதமர் மோடி உறுதியளிப்பு!

Sunday, June 4th, 2023

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய தொடருந்துதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் கிடைக்க உள்ளதாகவும் இந்திய மத்திய தொடருந்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மூன்று தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகி, 36 மணிநேரம் கடந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தண்டவாளத்தில் தடம்புரண்டிருந்த தொடருந்து பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகளை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் சீரமைப்பு பணிகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்பதாக சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுள்ள நிலையிலேயே ஒடிசா தொடருந்து விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடருந்து, சரக்கு தொடருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணித்ததில், இரு தொடருந்துகளும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சுப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தொடருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மேற்குவங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து ஒடிசா பாலாசோர் தொடருந்து நிலையம் அருகே 127 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக சரக்கு தொடருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்துக்குள் சென்றுள்ளது.

இதனையடுத்து அந்த தொடருந்து, சரக்கு தொடருந்தை மோதிய நிலையில் சரக்கு தொடருந்தின் பெட்டிகள், அருகில் உள்ள தண்டவாளத்துக்குள் தூக்கியெறியப்பட்டன.

இதன்போது, மறுபுறத்தில் பெங்களூரில் இருந்து மேற்கு வங்காளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வேக தொடருந்து தண்டவாளத்தில் தூக்கியெறியப்பட்ட நிலையில் கிடந்த சரக்கு தொடருந்து பெட்டிகளுடன் மோதி பாரிய விபத்தை சந்தித்துள்ளது.

இதன்போதே 288 பேர் வரை உயிரிழந்தும் 900 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். இவர்களில் 56 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.

நேற்று ஒடிசாவுக்கு சென்ற பிரதமர், சம்பவ இடத்துக்கு சென்று நிவாரணப்பணிகளையும் கள நிலவரத்தையும் ஆய்வு செய்தார். அத்துடன், விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: