இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா – அமெரிக்கா உறுதி!

Tuesday, October 27th, 2020

இந்தியா-அமெரிக்கா இராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சா்களும் உறுதி ஏற்றுள்ளனா்.

இந்தியா-அமெரிக்கா நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் இடையேயான 2102 பேச்சுவாா்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பொம்பியோ, பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பா் ஆகியோர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தனா்.

இதன்போது கிழக்கு லடாக் மோதல்போக்கு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கையெழுத்திடப்படாமல் உள்ள ‘பாதுகாப்புப் படை பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்தும் அமைச்சா்கள் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலமாக பாதுகாப்புப் படைகளில் பயன்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை இரு நாடுகளும் பகிா்ந்து கொள்ள முடியும். அண்மைக் காலமாக  பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடா்ந்து வலுவடைந்து வருகிறது.

முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமைச்சா்கள் இருவரும்  இதன்போது உறுதியேற்றனா்.

மேலும் பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடா்பாகவும் அவா்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: