இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் – குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

Wednesday, December 13th, 2023

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (லோக்சபா) ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் மற்றும் குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

முதற்கட்ட தகவல்களின்படி இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இரு நபர்களும் ‘தனா ஷாஹி நஹி சலேகி’ (சர்வாதிகாரம் ஏற்றுக்கொள்ளப்படாது) போன்ற கோஷங்களை எழுப்பியபடி கீழ் சபைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டபோது, அந்தச் சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்செயலாக, 22 ஆண்டுகளுக்கு முன்பு இதே திகதியில் அசம்பாவிதம் இடம்பெற்றமையை இந்திய ஊடகங்கள் நினைவுபடுத்தியுள்ளன.

இந்தநிலையில், சபை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய பாஜக உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் கூறுகையில், இருவரும் தங்கள் காலணியில் இருந்து எதனையோ எடுப்பதற்கு முன் கூட்ட அரங்கில் இருந்து உறுப்பினர்கள் வெளியேற முற்பட்டனர்.

“பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களின் நோக்கம் என்ன, அவர்கள் ஏதேனும் அமைப்புடன் தொடர்புள்ளவர்களா என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்று அகர்வால் குறிப்பிட்டார்.

இதனிடையே, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “இரண்டு இளைஞர்கள் கேலரியில் இருந்து குதித்தனர். அவர்களால் வாயு அடங்கிய குடுவைகள் எறியப்பட்டன. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு மீறலாகும், ஏனென்றால் 2001ஆம் ஆண்டில் உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை இன்று நாம் அனுசரித்தோம்” என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: