இது என்னுடைய இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள் மட்டுமே! டாக்டர் அப்துல் கலாம் எழுதி வெளி வராத கடிதம் !!

Tuesday, July 26th, 2016
நான் ஒரு சாதாரண விஞ்ஞானி. என்னை ஒரு ஆசிரியராக நினைவுக்கூர்தலே எனக்கு பெருமை தரும் விஷயமாக இருக்கும் என்று மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் இந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அப்துல் கலாம் பற்றி அவரின் உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங், எழுதியுள்ள புத்தகம் கலாம் நினைவு தினத்தில் வெளியிடப் பட உள்ளது. இன்னும் வெளிவராத அந்த புத்தகத்தின் சில பகுதிகள் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அறிவியல் விஞ்ஞானியாக இருந்த டாக்டர் அப்துல் கலாம் கடந்த 2002 முதல் 2007 வரை இந்திய குடியரசுத்தலைவராக இருந்தார். 2வது முறையாக குடியரசுத்தலைவராகும் வாய்ப்பு அவருக்கு கடந்த 2012ம் ஆண்டு வந்தது. 2012ம் ஆண்டு பிரதீபா பட்டீலுக்கு பிறகு அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.
மம்தாவின் கோரிக்கைக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட மற்ற தலைவர்கள் ஆதரவு அளித்தனர். பல ஊழல் குற்றசாட்டுகள் தொடர்ந்து வெளிவந்த அந்த காலக்கட்டத்தில் கலாம் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று பொது மக்களும் விரும்பினார்கள்.
ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை குடியரசுத்தலைவாக்க முடிவு செய்ததது. குடியரகுத்தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் உணர்ச்சிகர கோரிக்கையை கலாம் தீவிரமாக பரிசீலினை செய்தார். ஒருவேளை மம்தாவின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், தனது முடிவு குறித்து மக்களுக்கு விளக்க ஒரு கடிதமும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அந்த முடிவை பற்றி தெரிவிக்க ஒரு கடிதத்தையும் கலாம் எழுதி வைத்திருந்தார்.
தீவிர பரிசீலனைக்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை கலாம் எடுத்தார். இதனையடுத்து அவர் எழுதிய இரண்டாவது கடிதம் ஊடகங்களில் வெளியானது. அந்த கடிதத்தில் நான் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக விரும்பவில்லை. மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் அவர்களது கட்சி வேட்பாளராக நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர்.
பொதுமக்களும் நான் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் நான் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். அப்துல் கலாம் எழுதிய முதல் கடிதம் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கலாமின் உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங்கின் புத்தகத்தில் மேற்குரிய இரண்டு கடிதமும் இடம்பெற்றுள்ளது. ” அன்புள்ள இந்தியர்களே … உங்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஆதரவு எனக்கு குறைவாக இருப்பதை அறிந்தும் உள்ளேன். பெரும்பான்மை கிடைக்காது, தோல்வியடைய போகிறேன் என்றும் தெரிந்தே களமிறங்குகிறேன். ஆனால் நான் ஏற்கனவே மக்களின் இதயங்களை வென்றுவிட்டேன், இந்த தேர்தலில் போட்டியிடுவது கடமையாக எனக்குத் தெரிகிறது.
நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவனோ அல்லது குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஆதரிக்கவோ, எதிக்கவோ இல்லை. நான் ஒரு சாதாரண விஞ்ஞானி. என்னை ஒரு ஆசிரியராக நினைவுக்கூர்தலே எனக்கு பெருமை தரும் விஷயமாக இருக்கும். நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
இப்போது நான் ஒரு வேட்பாளர். வேட்பாளராக கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். எனக்கு ஒரு கட்சியின் ஆதரவோ, அல்லது செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவோ இல்லை. என் அன்புக்குரிய இந்தியர்களே.. எனக்காக நீங்கள் பிரசாரம் செய்யவேண்டும் என விரும்புகிறேன்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது கூட்டு முடிவு. நான் வெற்றியடைந்தாலும் தோல்வியை சந்தித்தாலும் எப்போதும் போல் என் மீது அன்பு காட்டுவீர்கள் என நம்புகிறேன். ஒரு வேளை நான் தோற்க கூட நேரிடலாம். ஆனால் உங்களிடம் நான் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும். இது ஒரு அரசியல் அறிக்கையும் அல்ல. தேர்தலுக்கான தாரக மந்திரமும் இல்லை. என்னுடைய இதயத்திலிருந்த வார்த்தைகள் மட்டுமே ” என அந்த கடிதத்தில் கலாம் கூறியுள்ளார். என்று கூறி கீதையிலிருந்து ஒரு வாசகத்தை மேற்கோள்காட்டி அந்த கடிதத்தை முடித்துள்ளார்அப்துல்கலாம்.

Related posts: