அமெரிக்கா- கட்டார் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, July 12th, 2017

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது தொடர்பில் அமெரிக்காவிற்கும் டோஹா கட்டாரிற்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கட்டாரிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் மொஹம்மட் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆகியோருக்கு இடையே இவ் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சவுதி அரேபியா உட்பட நான்கு வளைகுடா நாடுகள் கட்டாருடனான உறவை முறித்துக் கொண்ட நிலையில் வளைகுடா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடும் வகையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் கட்டார் விஜயம் அமைந்திருந்தது.

எனினும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கைக்கும் அண்மைய நெருக்கடி மற்றும் கட்டாருக்கு எதிராக திணிக்கப்பட்டுள்ள தடைகள் என்பவற்றுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் முதல் நாடு கட்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.கட்டார் பயங்கரவாதத்திற்கு துணை போவதாக தெரிவித்து சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு வளைகுடா நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: